தமிழ் நாட்டு வாக்காளர்களே!

4/18/20241 min read

தமிழ் நாட்டு வாக்காளர்களே!

நாளை இந்திய ஒன்றியத்தின் அரசாங்கத்தைத் தேந்தெடுக்க வாக்களிக்கும் நாள். அனைவரும் தவறாது வாக்களியுங்கள். வாக்களிக்கும் முன் நம் எதிர் காலத்தை நினைத்து அதன்படி ஓட்டினைப் பதிவு செய்யுங்கள். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்யும் கட்சி ஒரு போதும் மக்கள் நலன் சார்ந்தும் அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்தும் சிந்திக்கத் தவறி, மனிதர்களுக்கிடையே வேற்றுமையை மட்டுமே விதைத்திருக்கிறது.

பத்து வருடங்கள் ஆட்சி செய்த கட்சி இவ்வளவு சிறப்பான திட்டங்கள் செய்திருக்கிறோம், இவ்வளவு புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம், இத்தனை அரசுத் துறைகளை உருவாக்கி மக்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று கூறி வாக்கு கேட்காமல், அவர்கள் கறி உண்ணுகிறார்கள், நாங்கள் ராமர் கோவிலைக் கட்டியிருக்கிறோம் என்று கேவலமான சாதனைகளை முன் வைக்கின்றார்கள்.

2014 ஆம் ஆண்டு காங்கிரசு தமிழர்களுக்குச் செய்த துரோகத்தின் காரணமாகவும், நாட்டில் நிலவிய எதிப்பரசியல் மூலமாகவும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த இந்த ஒன்றிய அரசு, இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, தமிழர்களுக்கு மிகப் பெரிய அநியாயத்தையும் செய்திருக்கிறது.

பிரதமர் எங்கு சென்றாலும் தமிழை உயர்த்திப் பிடிக்கின்றார். தமிழ் மீது அவருக்கு அளவுகடந்த பற்று இருக்கிறது என்று ஊளையிடும் ஓநாய்களே. அந்த ஒன்றிய அரசு தமிழ் மொழிக்கு பட்ஜெட்டில் அறிவித்த அல்லது ஒதுக்கிய தொகை என்பது மிகக் குறைவே என்பதை சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய தொகையை ஒப்பீட்டுப் பார்க்கும்போது தெரியும்.

தனக்கு அடிபணியாத எதிர்க் கட்சிகளை தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்புகளைக் கொண்டு அவர்களை மிரட்டி, தன்னுடைய வாஷிங் மிஷினால் அவர்களின் கறைகளைப் போக்கும் கேவலமானக் கட்சியாக இருந்து வருகிறது.

தமிழ் நாட்டு அளவில் இந்தக் கட்சி செய்த சாதனை, நாகரீக அரசியலை அடியோடு வீழ்த்திவிட நினைத்ததுதான். பொய்களை மட்டுமே பேசுகின்ற மாநிலத் தலைவர். எந்தவித தரவுகள் இன்றியும் தினமும் பொய்களை மட்டுமே பேசி பிரிவினை வாதத்தை உண்டு பண்ணுவது. தனது கட்சிக்காரர்களை வீடியோ எடுத்து மிரட்டுவது என அரசியலுக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாத தற்குறியாகத்தான் இருக்கிறார்.

இளம் வாக்காளர்களே சிந்தியுங்கள்! உங்கள் முதல் வாக்கினை மனிதனை மனிதனாக நடத்துகின்ற கட்சிக்கு வாக்களியுங்கள். மாய பிம்பத்தின் பக்கம் எக்காரணம் கொண்டும் சென்றுவிடாதீர்கள். தமிழ் நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் அவர்களின் உரிமை மீதும் பற்று இருக்கின்ற இயக்கம் யார் என்று அடையாளம் காணுங்கள். உங்கள் வாக்குகள் இந்த தேசத்தை மாற்றி எழுதும் வரலாறு ஆகும்.

கள நிலவரம் இந்த ஒன்றிய ஆட்சிக்கு எதிராகவே இருக்கின்றது. ஆனால் அனைத்து ஊடகங்களும் இந்த ஆட்சி பொற்கால ஆட்சி போலவும் மக்கள் வருத்தப்படவே இல்லை என்பது போலவும் சித்தரிக்கின்றன. மக்களே விழித்துக்கொள்ளுங்கள் மாற்றம் உங்களில் இருந்து துவங்க வேண்டும். மானுட சிந்தனை அனைவரிடம் பெருகிட வேண்டும்.

தனி மனிதனின் சுதந்திரத்தை உறுதி செய்யும் அரசியல் கட்சி எது என்பதினைத் தீர்மானிக்கும் நல்வாய்ப்புதான் இந்தத் தேர்தல். சமத்துவத்தைப் பேணுகின்ற அரசியல் கட்சியை ஆட்சியில் அமர வையுங்கள்.

மகிழ்வுடன்

மசிவன்